
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சென்று இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.
பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி (வயது-48), தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக்கு நீரிணை கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்துள்ளார்.
தலைமன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமானது. சியாமளாக கோலி 30 கி.மீ தூரத்தை தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்துள்ளார்.
இதன் மூலம் பாக்கு நீரிணையை நீந்தி கடந்த 13 ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கணையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கணை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
பாக்கு நீரிணையை பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என சியாமளா கோலி தெரிவித்துள்ளார்.

Post a Comment